முகக்கவசம் மட்டுமே கரோனா தொற்றிலிருந்து தப்பிப்பதற்கான பாதுகாப்புக் கவசம் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும் மகாராஷ்டிரம் மற்றும் கேரளம் மாநிலத்தில் நாள்தோறும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் தொற்று பாதிப்பை கட்டுக்குள் வைக்க மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சத்ரபதி சிவாஜி காலத்தில் நடந்த போர்களில் வாள்களும் கேடயங்களும் பயன்படுத்தப்பட்டாலும், கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முகக்கவசம் மட்டுமே பாதுகாப்பு ஆயுதம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கரோனா தொற்றுக்கு எதிராக நாம் போரிட்டு வருகிறோம் எனத் தெரிவித்த அவர் மக்கள் முகக்கவசத்தை தவிர்க்கக் கூடாது என வலியுறுத்தினார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது மொத்தம் 20,81,520 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.