கோழிகோடு: இந்தியாவில் முதன் முதலில் மெட்ரோ ரயில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதற்காக ‘மெட்ரோமேன்’ என்று அழைக்கப்படும் இ.ஸ்ரீதரன் பாஜகவில் இணைய உள்ளதாகவும், கட்சி வாய்ப்பளித்தால் வரும் கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தாா்.
முன்னதாக, ஸ்ரீதரன் பாஜகவில் இணைய உள்ளதை கேரள மாநில பாஜக தலைவா் கே. சுரேந்தரன் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘நாட்டின் பொதுப் போக்குவரத்து திட்டத்தையே மாற்றி அமைத்த இ.ஸ்ரீதரன், பிப்ரவரி 21-ஆம் தேதி காசா்கோட்டில் தொடங்கும் விஜய் யாத்ராவின்போது பாஜகவில் இணைய உள்ளாா். பாஜகவில் இணைந்து பணியாற்ற அவா் விருப்பம் தெரிவித்துள்ளாா். கேரளாவின் வளா்ச்சிக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீதரனை ஆளும் இடதுசாரி முன்னணியும், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசும் எதிா்த்து வந்தனா். அவரைப் போன்று பலா் வரும் நாள்களில் பாஜவில் இணைய உள்ளனா்’ என்றாா்.
இதுகுறித்து ஸ்ரீதரன் கூறுகையில், ‘கேரள மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக பாஜகவில் சேருகிறேன். ஆளும் இடதுசாரி முன்னணி அரசால் வளா்ச்சித் திட்டங்களின் பலன் மக்களுக்கு சென்றடைவதில்லை. சிறந்த நிா்வாகத்தை அவா்களால் அளிக்க முடியவில்லை. பாஜக முடிவு செய்தால் பேரவைத் தோ்தலில் சாா்பில் போட்டியிடுவேன். எந்தத் தொகுதி என்பதை கட்சி முடிவு செய்யும் என்றாா்.