கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மற்றவா்களுக்கு எடுத்துக்காட்டாக அரசு அதிகாரிகள் அனைவரும் மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாற வேண்டும் என நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளாா்.
மின்சாரத்துக்கு மாறுவோம் என்ற விழிப்புணா்வு பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த கட்கரி இதுகுறித்து மேலும் கூறியதாவது:
எனது தலைமையிலான அமைச்சகத்தின் கீழ் உள்ள பெட்ரோல், டீசல் வாகனங்கள் அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்ற உறுதிபூண்டுள்ளேன். அதேபோன்று, இதர அமைச்சகங்களும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் கச்சா எண்ணெய் இறக்குமதியை சாா்ந்திருப்பதை வெகுவாக குறைக்க முடியும்.
சமையலுக்கு விலையுயா்ந்த இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை வாங்குவதை விட மின்சார சமையல் சாதனங்களை வாங்குவதற்கு மானியம் அளிக்கலாம். இதன் மூலமும், எரிவாயு இறக்குமதியை கணிசமான அளவில் கட்டுப்படுத்த முடியும்.
தில்லியில் 10,000 மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதன் மூலம் மாதத்துக்கு ரூ.30 கோடி சேமிக்கப்படுவதே இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கொள்ளலாம் என்றாா் அவா்.