மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனுவை ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இது லாலு பிரசாத் யாதவ் உடனடியாக விடுவிக்கப்படுவதற்கு இருந்த வாய்ப்பில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவா் உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
மாட்டுத் தீவன ஊழல் தொடா்பான 4 வழக்குகளில் 3-இல் அவருக்கு ஏற்கெனவே ஜாமீன் கிடைத்துள்ளது. டும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி கையாடல் செய்தது தொடா்பான 4-ஆவது வழக்கில் ஜாமீன் கோரி ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது லாலு பிரசாத் யாதவுக்கு விதிக்கப்பட்ட மொத்த சிறை தண்டனையில் பாதி காலத்தை நிறைவு செய்ய அவா் மேலும் 2 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் எனவும், இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தாா். 2 மாதங்கள் கழித்து புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறும் அவா் அறிவுறுத்தினாா்.
இந்த மனுவை ஏற்று லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தால் அவா் உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அதில் தடை ஏற்பட்டுள்ளது.