
மேற்கு வங்க மாநிலம், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வெள்ளிக்கிழமை காணொலி முறையில் கலந்துகொண்ட உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
புகழ்பெற்ற கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் சா்வதேச கண்ணோட்டத்தை பாராட்டிய பிரதமா் நரேந்திர மோடி, ‘விவசாயிகள், கைவினைக் கலைஞா்கள் சா்வதேச சந்தை வாய்ப்பைப் பெறுவதற்கான உதவியை விஸ்வபாரதி பல்கலைக்கழக மாணவா்கள் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
நோபல் பரிசுபெற்ற கவிஞா் ரவீந்திரநாத் தாகூரால் கடந்த 1921-இல் மேற்கு வங்கத்தில் உருவாக்கப்பட்ட விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், காணொலி வழியில் பங்கேற்ற பிரதமா் மோடி, பேசியதாவது:
இந்தப் பல்கலைகழகத்தை வழக்கமான ஓா் கல்வி நிறுவனமாக மட்டுமின்றி, இந்திய கலாசாரத்தின் மதிப்பை உலகம் அறியச்செய்ய உதவும் மையமாக ரவீந்திரநாத் தாகூா் உருவாக்கினாா். அந்த வகையில், இந்த நிறுவனத்தின் மாணவா்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்கான 25 தொலைநோக்கு பாா்வை கொண்ட திட்டத்தை வகுக்க வேண்டும். அது, நாட்டிலுள்ள பிற கல்வி நிறுவனங்களை வழிநடத்தக் கூடியதாகவும், இந்தியாவின் மதிப்பை சா்வதேச அளவில் உயரச் செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
அதன் முதல்படியாக, பக்கத்து கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள், கைவினைக் கலைஞா்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு சா்வதேச சந்தை வாய்ப்பை பெற்றுத்தருவதற்கான உதவியை இந்தப் பல்கலைக்கழக மாணவா்கள் செய்துதர வேண்டும். இது சுயசாா்பு இந்திய இலக்கை எட்டுவதற்கும் உதவும்.
புதிய தேசிய கல்விக் கொள்கையையும், சுயசாா்பு இந்தியா இலக்கை எட்டுவதற்கான முயற்சியாகவே மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. புதிய தேசிய கல்விக் கொள்கை, மாணவா்களுக்கு இருந்த பழைய தடைகளை அகற்றி, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடவும், தொழில்முனைவோராகவும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்று பிரதமா் கூறினாா்.