பாட்னா: பிகார் மாநிலத்தில் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதச் சென்ற மாணவிக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தேர்வெழுதிக் கொண்டிருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்டு பிறந்த ஆண் குழந்தைக்கு இம்திஹான் என்று பெயரிட்டுள்ளார். இம்திஹான் என்றால் தேர்வு என்று பொருளாகும்.
பிகார் மாநிலம் முஸாபர்பூர் மாவட்டத்தில் 21 வயது நிறைமாத கர்ப்பிணி சாந்தி குமார், கடந்த வெள்ளிக்கிழமை தேர்வெழுதச் சென்றார்.
தேர்வு தொடங்கியதுமே அவருக்கு பிரசவ வலியும் தொடங்கிவிட்டது. எப்படியாவது தேர்வை முடித்துவிட வேண்டும் என்று நினைத்த சாந்தி, ஒரு மணி நேரமாக பிரசவ வலியைத் தாங்கிக் கொண்டு தேர்வெழுதியுள்ளார். ஆனால் முடியாமல், தேர்வுக் கண்காணிப்பாளரிடம் தனக்கு பிரசவ வலி ஏற்பட்டது குறித்து தெரிவித்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, தேர்வறைக்கு வெளியே இருந்த அவரது கணவருடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக அவரது கணவர் தெரிவித்தார். நிறைமாதமாக இருந்ததால் தேர்வெழுதச் செல்ல வேண்டாம் என்று குடும்பத்தினர் சொல்லியும் அவர் படிப்பின் மீதான ஆர்வத்தில் தேர்வெழுத வந்தார் என்று கணவர் பிர்ஜூ கூறினார்.