ரயில்வே துறையை தனியார்மயம் ஆக்குவது லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு அச்சுறுத்தல் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மத்திய அரசை விமரிசித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது:
"ரயில்வே துறை நாட்டின் ஒரு அங்கம். அது எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தம். லட்சக்கணக்கான மக்கள் ரயில்வே மூலம் குறைந்த விலையில் பயணம் செய்கின்றனர்.
ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் அரசின் நோக்கத்தை கடந்த நிதிநிலை அறிக்கை தாக்கலில் கவனித்தேன். ரயில்வேவைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு இது அச்சுறுத்தல். ரயில்வேவில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கும் இது பிரச்னையை உண்டாக்கும்" என்றார் ராகுல்.
மலப்புரத்தில் இரண்டு குழந்தைகளுடனும் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அதன்பிறகு அவர் கூறுகையில், "அவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். ஒருவர் மருத்துவர் ஆக விரும்புகிறார். மற்றொருவர் பெண் காவலர் ஆக விரும்புகிறார். நலிவுற்றவர்களையும், ஏழைகளையும் பாதுகாப்பதற்காக பெண் காவலர் ஆக வேண்டும் என அவர் விரும்புகிறார். ஏழைகளுக்கு சொந்தமானதை அபகரித்துக்கொள்ள அவர் விரும்பவில்லை" என்றார்.