பாட்னா: பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பாஸ்தி கிராமத்தில் கட்டப்பட்ட புதிய தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது.
முதல்வர் நிதிஷ் குமாரின் தொகுதிக்கு உள்பட்ட நலந்தா மாவட்டம் நர்நௌத் பகுதியில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி, கட்டப்பட்டபோதே, தரமற்ற கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இன்று அது இடிந்து விழுந்துள்ளது.
தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது குறித்து பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறையின் இளம் பொறியாளர் அபே சிங் கூறுகையில், சில சமூக விரோதிகள் தண்ணீர்தொட்டியின் முக்கிய இணைப்புகளைக் கழற்றிவிட்டதே இடிந்து விழக் காரணம் என்று கூறியுள்ளார்.
அதேவேளையில், ஹர்நௌத் பகுதியில் மட்டும் முதாரி, சிலா மற்றும் அதனையொட்டியுள்ள சில கிராமங்களிலும் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகள் இடிந்து விழுந்ததையும் அபே ஒப்புக் கொண்டுள்ளார்.
முதல்வர் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தண்ணீர்தொட்டிகள் இப்படி கட்டப்பட்டு சில மாதங்களிலேயே இடிந்து விழுவது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.