உ.பி.யில் அதிர்ச்சி: பாதி எரிந்த நிலையில் கல்லூரி மாணவி மீட்பு
உத்தரப் பிரதேசத்தின், நாகரியா கிராசிங் நெடுஞ்சாலை அருகே பாதி எரிந்த நிலையில் கல்லூரி மாணவி மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
20 வயதுக்குள்பட்ட அந்த இளம்பெண், சுவாமி சுகதேவானந்த் கல்லூரியில் பி.ஏ.இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்து உள்ளூர்வாசிகள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர், சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக ஷாஜகான்பூர் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆனந்த் கூறுகையில்,
மாணவி உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் மேல் சிகிச்சைக்காக லக்னௌ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மாணவி தந்த தொலைபேசி எண் மூலம் அவளின் தந்தைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாணவியின் தந்தை கூறுகையில்,
வழக்கம்போல் நேற்று மதியம் 3 மணியளவில் கல்லூரியிலிருந்து அழைத்துச்செல்ல வந்தபோது, தன் மகள் அங்கில்லை. நீண்ட நேரம் காத்திருந்தும் வராததால் அவளைத் தேட ஆரம்பித்தோம் என்று அவர் கூறினார். ஏன்? எதற்காக? இந்த சம்பவம் நிகழ்ந்தது என புரியவில்லை என்றார்.
எரிந்த நிலையில் உள்ள மாணவி சிகிச்சையில் உள்ளதால் அவளால் சரியான தகவல் அளிக்கமுடியவில்லை, மேலும், கல்லூரி நண்பர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருவதாகக் காவல் அதிகாரி தெரிவித்தார்.