டூல் கிட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சூழலியல் ஆர்வலர் திஷா ரவி திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைத் துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
தில்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல் கிட் வழக்கில் சூழலியல் ஆர்வலர் திஷா ரவி (21) கடந்த 13-ம் தேதி பெங்களூருவில் வைத்து தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, தில்லி நீதிமன்றத்தில் திஷா ரவி ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தலா ரூ. 1 லட்சத்துக்கான இருநபர் உத்தரவாதத்துடன் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், அவர் திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, திஷா ரவியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி காவல் துறைக்கு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.