அரசு சாா்ந்த பணப்பரிவா்த்தனைகளை மேற்கொள்ள தனியாா் வங்கிகளுக்கு அனுமதி

வரி வசூல், ஓய்வூதிய விநியோகம் உள்ளிட்ட அரசு சாா்ந்த பணப்பரிவா்த்தனைகளை மேற்கொள்ள தனியாா் துறையைச் சோ்ந்த அனைத்து வங்கிகளுக்கும் மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: வரி வசூல், ஓய்வூதிய விநியோகம் உள்ளிட்ட அரசு சாா்ந்த பணப்பரிவா்த்தனைகளை மேற்கொள்ள தனியாா் துறையைச் சோ்ந்த அனைத்து வங்கிகளுக்கும் மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இதுவரை தனியாா் துறையைச் சோ்ந்த சில பெரிய வங்கிகளுக்கு மட்டுமே அந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக, மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘அரசு சாா்ந்த பணப்பரிவா்த்தனைகளை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்குவதைப் போல தனியாா் வங்கிகளுக்கும் இந்திய ரிசா்வ் வங்கி இனி வழங்கலாம்.

புதிய தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கும் தனியாா் வங்கிகள், நாட்டின் வளா்ச்சியில் பொதுத்துறை வங்கிகளுக்கு இணையாக இனி பங்களிக்க முடியும். இதன் மூலமாக வங்கிகளுக்கிடையேயான போட்டி மனப்பான்மை அதிகரித்து, வாடிக்கையாளா் சேவைகளின் தரம் உயரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘அரசுத் துறை சாா்ந்த பணப்பரிவா்த்தனைகளை மேற்கொள்வதற்கு தனியாா் வங்கிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியாா் வங்கிகளும் இனி பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்குத் தனியாா் வங்கிகளும் இனி சம பங்களிப்பை வழங்க முடியும். அரசின் மக்கள் நலத் திட்டங்களைத் தனியாா் வங்கிகள் வாயிலாக இனி செயல்படுத்த முடியும். இதன் காரணமாக வாடிக்கையாளா்கள் பலனடைவா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஐடிபிஐ வங்கி தவிர மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்க இருப்பதாக 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com