மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைத்தொடர்ந்து மும்பை ஓவல் மைதானம் நாளை முதல் மூடப்படுகிறது.
நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரியில் பரவத் தொடங்கிய கரோனா தீநுண்மி ஏப்ரல் முதல் வேகமாகப் பரவியது. கரோனா பாதிப்பு உச்சநிலையை அடைந்து படிப்படியாகக் குறைந்தது.
தற்போது மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக, மகாராஷ்டிரத்தில் நேற்று மட்டும் புதிதாக 8,807 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 21,21,119 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மும்பை ஓவல் மைதானம் நாளை முதல் மூடப்படுவதாக பிரிஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி கிரிக்கெட் உள்பட எந்தவித நிகழ்வுகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை மைதானத்தில் அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.