புது தில்லி: தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலின்போது பணபலம், இலவசங்கள், போதைப்பொருள்களின் புழக்கத்தைத் தடுப்பது குறித்து பல்வேறு துறைகளின் தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் மார்ச் 2-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் புதன்கிழமை கூறியதாவது: மத்திய வருவாய்த் துறை செயலர், மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத் தலைவர், நிதி நுண்ணறிவுப் பிரிவு இயக்குநர் உள்ளிட்டோருடன் தேர்தல் ஆணையம் மார்ச் 2-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது. இதில் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் தேர்தலின்போது சந்தேகத்துக்குரிய சட்டவிரோத பணப் பரிமாற்றம், மது மற்றும் போதைப்பொருள் விநியோகம் உள்ளிட்டவற்றை தடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது என்று தெரிவித்தன.
இதனிடையே, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல் தேதிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் புதன்கிழமை ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.