உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள தபோவான் சுரங்கத்தில் தண்ணீர் அதிகரித்துள்ளதால், அதனை மோட்டார் வைத்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, அங்குள்ள தௌலி கங்கா, ரிஷி கங்கா, அலக் நந்தா நதிகளில் கடந்த 7-ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டு மின் நிலைய கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த சுரங்கங்களில் வெள்ள நீர் புகுந்தது. அதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
தபோவான் சுரங்கத்தில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அந்த சுரங்கத்தில் தண்ணீர் அதிகரித்து வருவதால், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சுரங்கத்தில் தண்ணீர் அளவு அதிகரித்து வருவதால், மோட்டார் வைத்து அதனை வெளியேற்றும் பணியில் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர்.