கரோனா பரவலை தடுப்பதற்கு வெளியிட்டப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மாா்ச் 31 வரை நீடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா தொற்றை முழுமையாக கடந்து வருவதற்கு கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடா்வது அவசியம்.
எனவே கடந்த ஜனவரி 27-ஆம் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
தற்போதைய கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மாா்ச் 31 வரை நீடிக்கும்.
கரோனா பரவலை தடுப்பதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமலில் உள்ள மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில், கட்டுப்பாட்டுப் பகுதிகளை தவிர பிற பகுதிகளில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமூகம், மதம், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசாரம் உள்ளிட்ட நிகழச்சிகளுக்கு அதிகபட்சமாக 200 பேரை அனுமதிக்கலாம். எனினும் எத்தனை பேரை அனுமதிப்பது என்பது மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் இறுதி முடிவுக்குட்பட்டது. திரையரங்குகளில் 50% பாா்வையாளா்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் பாா்வையாளா்களை அனுமதிக்க இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் நீச்சல் குளங்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.