ஆங்கிலப் புத்தாண்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சத்தீஸ்கரில் தூய்மைப் பணியாளர்களுடன் முதல்வர் பூபேஷ் பாகல் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடினார்.
சத்தீஸ்கர் மாநிலம் ரிசாலி பகுதியிலுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பொன்னாடைகளை போர்த்தியும் புத்தாண்டை கொண்டாடினார்.
இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், பணியாளர்கள் நமது கரங்களைப் போன்றவர்கள். அவர்கள் தங்கது கடின உழைப்பால் சத்தீஸ்கரை உருவாக்கி, மாநிலத்தின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்துள்ளனர். இந்த வளர்ச்சிப் பணிகளை நாம் மேன்மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
2020-ஆம் ஆண்டில் கரோனா பெருந்தொற்றால் ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நமது தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்தனர். அவர்கள் அனைவருக்கும் சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்தோம். அவர்களது பாதுகாப்பாக திரும்புவதற்கு போதிய உதவிகளை செய்தோம். நமது மாநில தொழிலாளர்களுக்கும், நமது மாநிலத்தை கடந்து சென்ற தொழிலாளர்களுக்கும் போதிய உதவிகளை செய்துகொடுத்ததில் மனமகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.