கரோனா தடுப்பூசி எந்த அரசியல் கட்சியினருக்கும் சொந்தமானதல்ல என்றும் அது மனிதநேயத்துடன் தொடர்புடையது எனவும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி குறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
தனது சுட்டுரைப் பதிவில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, “ எனக்கு மற்றவர்களைக் குறித்துத் தெரியாது. ஆனால் எனக்கான முறை வரும்போது நான் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வேன். அதிகமான மக்கள் தடுப்பூசி போடுவது நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் நல்லது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கரோனா தடுப்பூசி எந்தவொரு அரசியல் கட்சியையும் சேர்ந்தவை அல்ல என்றும் ஆனால் அது மனிதநேயம் சார்ந்தது எனவும் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
முன்னதாக அகிலேஷ் யாதவ், “பாஜக தடுப்பூசியை நான் எவ்வாறு நம்ப முடியும்? பாஜகவின் தடுப்பூசியைப் போட முடியாது” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.