பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நலமாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை தெரிவித்தார்.
கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, உட்லாண்ட் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று நலம் விசாரித்தார். அதன்பிறகு மருத்துவமனை வெளியே செய்தியாளர்களிடம் அவர் பேசியது, "கங்குலி நலமாக உள்ளார். என்னுடைய உடல்நலம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி" என்றார்.
இதனிடையே, மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப்பும் தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு நேரில் சென்று கங்குலியிடம் நலம் விசாரித்தார்.
முன்னதாக, கங்குலியின் உடல்நலம் குறித்து செய்தியாளர்களிடம் மருத்துவர் தெரிவித்தது:
"சௌரவ் கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் தற்போது சீராக உள்ளார். 24 மணி நேரம் கண்காணிப்பில் இருப்பார். அவரது இருதயத்தில் 2 அடைப்புகள் உள்ளன. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்படும். தற்போதைய நிலையில் அவர் சீராக இருக்கிறார். அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி திங்கள்கிழமை ஆலோசனை நடைபெறுகிறது. அவர் அபாயகர கட்டத்தில் இல்லை, நன்றாக பேசுகிறார்."