இந்தியாவில் சுய தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் பகுதியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஜன.2) நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் பேசியதாவது, ''இன்று தொடங்கப்படும் சிறு தொழில்கள் நாளைய பெரு நிறுவனங்களாக உருவாகின்றன. பெரும்பாலான சுய தொழில்கள் இரண்டு, மூன்று நகரங்களில் மட்டுமே தொடங்கப்படுகிறது.
வேளாண்மை முதல் விண்வெளி ஆய்வு வரை சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
2014-ஆம் ஆண்டு வரை நாட்டில் 13 இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது 20 இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இத்தகைய செயல் தன்னம்பிக்கை இந்தியா பிரசாரத்தை மேலும் வலுப்படுத்தும்'' என்று பிரதமர் மோடி கூறினார்.