இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் ஜனவரி 8-ஆம் தேதி முதல் மீண்டும் பயணிகள் விமானங்கள் இயக்கப்படும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்கு கடந்த டிசம்பா் 23-ஆம் தேதி முதல் பயணிகள் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஜனவரி 7 வரை அந்நாட்டுக்கு விமான சேவை நிறுத்திவைக்கப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில் ஜனவரி 8-ஆம் தேதி முதல் அந்நாட்டுக்கு இந்தியாவில் இருந்து மீண்டும் பயணிகள் விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி வெள்ளிக்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-பிரிட்டன் இடையே வரும் ஜனவரி 8 முதல் 23-ஆம் தேதி வரை முதல் வாரந்தோறும் 30 பயணிகள் விமானங்கள் மட்டும் இயக்கப்படும். இதில் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு 15 விமானங்களும், பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு 15 விமானங்களும் இயக்கப்படவுள்ளன. இந்த சேவை தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு மட்டும் அளிக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.