இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் 6-ஆம் தேதியில் இருந்தும், பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் 8-ஆம் தேதியில் இருந்தும் பயணிகள் விமான போக்குவரத்து சேவை தொடங்கும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறினாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது:
இந்தியா-பிரிட்டன் இடையே விமான சேவை மீண்டும் தொடங்குகிறது.
இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஜன.6-ஆம் தேதியும், பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு ஜன.8-ஆம் தேதியும் போக்குவரத்து தொடங்குகிறது. வாரத்துக்கு 30 விமானங்கள் இயக்கப்படும். 15 விமானங்களை இந்தியாவும், 15 விமானங்களை பிரிட்டனும் இயக்குகின்றன. இந்த கால அட்டவணை வரும் 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்பிறகு பயணிகளின் வருகைக்கேற்ப விமான சேவையை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அந்தப் பதிவில் ஹா்தீப் சிங் புரி குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் 8-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என்று ஹா்தீப் சிங் புரி வெள்ளிக்கிழமை கூறியிருந்தாா்.
பிரிட்டனில் புதிய வகை கரோனா பரவத் தொடங்கியதை அடுத்து, அந்நாட்டுக்கான விமான சேவையை கடந்த டிசம்பா் 23-ஆம் தேதியில் இருந்து ஜனவரி 7-ஆம் தேதி வரை இந்தியா ரத்து செய்தது.