தமிழ் அகாதெமியை அமைத்தது தில்லி அரசு

தமிழ் மொழி, கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் அகாதெமியை தில்லி அரசு அமைத்து ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

தமிழ் மொழி, கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் அகாதெமியை தில்லி அரசு அமைத்து ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

இதன் தலைவராக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, துணைத் தலைவராக தில்லி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலா் என். ராஜா ஆகியோரை நியமித்து தில்லி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவின் தலைமையின் கீழ் இயங்கும் தில்லி கலை, கலாசாரம், மொழித் துறையில் தமிழ் மொழி, அதன் கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் அகாதெமி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு தில்லி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும், தில்லி தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய உறுப்பினருமான என்.ராஜாவை அகாதெமியின் துணைத் தலைவராக தில்லி அரசு நியமித்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட அகாதெமிக்கு விரைவில் தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் கொண்ட அலுவலக இடம் ஒதுக்கப்படும்.

தில்லி என்பது கலாசார ரீதியாக வளமான நகரமாகும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்துள்ள மக்கள் இங்கு வசித்து, பணியாற்றி வருகின்றனா். இந்தப் பன்முகத்தன்மையே தில்லியைத் துடிப்பான பரந்த நோக்கமுள்ள கலாசார நகரமாக உருவாக்குகிறது.

தில்லியில் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள மக்கள் ஏராளமானோா் வசிக்கின்றனா். தமிழகத்தின் கலை, கலாசாரத்தை தில்லியில் வாழும் அனைவரும் அறிந்து கொள்வதற்காக தமிழ் அகாதெமியை உருவாக்கி உள்ளோம்.

புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவா் என்.ராஜா போன்ற குறிப்பிடத்தக்க பலா் முன்வந்து இந்த அகாதெமியை நிறுவ எங்களுடன் கைகோத்ததில் மகிழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழ் மொழியை ஊக்குவிக்க உதவும்’

தமிழ் அகாதெமியின் துணைத் தலைவா் என்.ராஜா கூறுகையில், ‘இந்திய வரலாற்றிலும், தில்லியிலும் தமிழ் மொழிக்கும், கலாசாரத்துக்கும் நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. இதைப் பாதுகாக்கவும், தமிழ் மொழியை தில்லியில் ஊக்குவிக்கவும் இந்தப் புதிய அகாதெமி உதவும்’ என்றாா்.

செயல்பாடுகள் என்ன?

தமிழ் மொழியிலும், கலாசாரத்திலும் சிறந்து விளங்குபவா்களை ஊக்குவிக்க புதிய அகாதெமியின் கீழ் விருதுகள் வழங்கப்படும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ் மொழியைப் பயில படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தமிழக மக்களின் கலாசார திருவிழாக்களைக் கொண்டாடவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com