தில்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஜனவரி 6-ம் தேதி மேற்கொள்ளவிருந்த டிராக்டர் பேரணியை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்தன.
சிங்கு எல்லையில் விவசாய சங்க பிரதிநிதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் வரும் நாள்களில் தீவிரப்படுத்தப்படும் என விவசாய சங்கங்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி ஸ்வராஜ் அபியன் தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்தது:
"புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்து 7 மாதங்கள் ஆகிவிட்டன. விவசாயிகளுடன் மத்திய அரசு 7 முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டது. ஆனால், "வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்" என்கிற விவசாயிகளின் கோரிக்கைக்கு மட்டும் அரசு செவி சாய்க்கவில்லை. மோசமான வானிலை சூழல் காரணமாக டிராக்டர் பேரணி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது."
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் தில்லியில் கடும் குளிருக்கு மத்தியிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு நவம்பர் 26-இல் தொடங்கிய போராட்டம் 40 நாள்களுக்கும் மேல் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாயிகளுக்கிடையே நடைபெற்ற 7 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இருதரப்புக்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது.