கரோனா பரவலின் மத்தியில் வழக்கம் போல் குடியரசு தினவிழா அணிவகுப்பை மேற்கொள்வது பொறுப்பற்ற செயல் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினவிழாவை முன்னிட்டு தலைநகர் தில்லியில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தினவிழாவிற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக வர இருந்த நிலையில் புதிய வகை கரோனா பரவல் காரணமாக அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியரசு தினவிழாவை கரோனா தொற்று பரவல் சூழலில் நடத்துவது குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “போரிஸ் ஜான்சனின் இந்தியா வருகை கரோனா இரண்டாம் அலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று முக்கிய விருந்தினர் இல்லை. ஏன் ஒரு படி மேலே சென்று குடியரசு தின விழாக்களை முழுவதுமாக ரத்து செய்யக்கூடாது? எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “வழக்கம் போல் அணிவகுப்பை உற்சாகப்படுத்த கூட்டம் வருவது பொறுப்பற்றது" என்று அவர் கூறினார்.