தில்லியில் மழை காரணமாக இன்று நடைபெறவிருந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் 40 நாள்களைக் கடந்து கடும் பனிமூட்டம் நிலவி வரும் சூழ்நிலையிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உறுதி செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல் தில்லி எல்லைகளில் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்கும் அவர்கள் இன்று டிராக்டர் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தில்லியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று நடத்துவதாக அறிவித்திருந்த டிராக்டர் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நாளை(வியாழக்கிழமை) டிராக்டர் பேரணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், குடியரசு தினத்தன்று நடைபெறவுள்ள மிகப்பெரும் டிராக்டர் பேரணிக்கு இது முன்னோட்டமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.