புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
வரும் 29 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதனிடையே, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து, வரும் 13 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணியை நாடு முழுவதும் தொடங்கவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கரோனா தடுப்பூசி நிலை, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் போராட்டம், பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.