புதிய வகை கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரிட்டனிலிருந்து பரவிய புதிய வகை கரோனா நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இதனைத் தடுக்க அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜன.6) விசாரணைக்கு வந்தது. அப்போது புதியவகை கரோனாவை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் கண்காணிக்கப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிமன்றம் நிபுணர்களின் ஆலோசனை பெற்று பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.