சண்டிகர்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான குடியரசு தின விழா பேரணியில் பங்கேற்பதற்காக பெண்கள் டிராக்டர் இயக்க பயிற்சி எடுத்து வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காவிடில் குடியரசு தின விழாவில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இதனிடையே டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக ஹரியாணா மாநிலத்தில் சாபா கெரி, கட்கார், பலிவான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் டிராக்டர் இயக்கப் பழகி வருகின்றனர்.
இது குறித்து பேசிய கிசான் ஏக்தா மஹிலா மன்ச் அமைப்பை சேர்ந்த தலைவர் சிகிம் நைன் கூறியதாவது, வேளாண்மை தொழிலில் ஈடுபடும் பெண்கள் விவசாய நிலத்தில் டிராக்டர் இயக்குகின்றனர்.
ஆனால், அவர்கள் சாலைகளில் டிராக்டரை இயக்கியதில்லை. குடியரசு தினத்தில் பெண்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் டிராக்டர்களை இயக்க வேண்டும் என எண்ணுகிறோம்.
பல கிராமங்களைச் சேர்ந்த விவசாய குடும்பத்தினர் தங்களது டிராக்டர்களை பெண்களின் பயிற்சிக்காக வழங்குகின்றனர்.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஜிந்த் - பாட்டியாலா தேசிய நெடுஞ்சாலையில் பெண்களுக்கு டிராக்டர் இயக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. என்று கூறினார்.
குடியரசு தின விழாவில் நடைபெறும் டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக டிராக்டர் இயக்க பயிற்சி எடுப்பதாக விவசாயப் பெண் ஒருவர் தெரிவித்தார்.