ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களுக்கு 11 தவணையாக ரூ. 6,000 கோடி விடுவிப்பு

ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களுக்கு 11 தவணையாக ரூ. 6,000 கோடி விடுவிப்பு

மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடாக மேலும் ரூ. 6,000 கோடியை மத்திய அரசு 11-ஆவது தவணையாக திங்கள்கிழமை விடுவித்தது.

புது தில்லி: மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடாக மேலும் ரூ. 6,000 கோடியை மத்திய அரசு 11-ஆவது தவணையாக திங்கள்கிழமை விடுவித்தது.

ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ரூ. 1.10 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்று கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் மத்திய அரசு மதிப்பிட்டது. இந்த வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக, சிறப்பு சாளர முறையில் மத்திய அரசு கடன் திரட்டி, மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்தது. அதன்படி மத்திய அரசு கடன் திரட்டி, அதனை வாரந்தோறும் தவணை முறையில் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.

இந்த நிலையில், மாநிலங்களுக்கு 11-ஆவது தவணையாக ரூ. 6,000 கோடியை மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை விடுவித்தது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஜிஎஸ்டி குழுவில் உறுப்பினா்களாக இடம்பெற்றிருக்கும் 23 மாநிலங்களுக்கு ரூ. 5,516.60 கோடியும், தில்லி, ஜம்மு-காஷ்மீா், புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 483.40 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை 5.10 சதவீத வட்டி வீதத்தில் கடனாகப் பெறப்பட்டுள்ளது.

இந்த 11-ஆவது தவணை மூலம், இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக மொத்தம் ரூ. 66,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் சராசரியாக 4.72 சதவீத வட்டி வீதத்தில் பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com