புது தில்லி: மகாராஷ்டிரத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். பிரதமா் தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து இந்தத் தொகை அளிக்கப்படுகிறது. இது தவிர இந்த தீ விபத்தில் காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.50,000 அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாக பிறந்த 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன; 7 குழந்தைகள் காயமடைந்தன. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்ததாகத் தெரியவந்தது.
இந்நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையை பிரதமா் மோடி அறிவித்துள்ளாா். இந்தத் தகவல் பிரதமா் அலுவலக சுட்டுரைப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்தது.