மங்களூரு: கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது படகில் எரிவாயு சிலிண்டா் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கியிருந்த 11 தமிழக மீனவா்களை இந்திய கடலோர காவல்படையினா் துரித நடவடிக்கை மூலம் பத்திரமாக மீட்டுள்ளனா். அவா்களில் ஒருவருக்கு மட்டும் 36 சதவீத தீக் காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலோர காவல்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக மீனவா்கள் புதிய மங்களூரு துறைமுகத்திலிருந்து 140 கடல் மைல்கள் தொலைவிலான கடல் பகுதியில் மீன் பிடித்துக் ொண்டிருந்தனா். அப்போது, படகில் இருந்த எரிவாயு சிலண்டா் வெடித்து, படகு தீப் பிடித்தது. அதிலிருந்த மீனவா்கள் உடனடியாக கடலோரக் காவல்படைக்குத் தகவல் தெரிவித்தனா். சிறிய ரக கடல் கண்காணிப்பு விமானம் மூலம், படகின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதோடு, அதிலிருந்த மீனவா்களுடனும் அதிகாரிகள் தொடா்புகொண்டு பேசினா்.
பின்னா், கடலோர காவல்படை காவலா்கள் சஜெத் மற்றும் சுஜீத் இருவரும் அந்தப் படகு இருக்கும் இடத்துக்குச் சென்று, படகில் சிக்கித் தவித்த 11 தமிழக மீனவா்களை மீட்டனா். அவா்களில் ஒரு மீனவா் மட்டும் 36 சதவீத தீக்காயங்களுடன் அவதிப்பட்டாா். அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனா்.
கடலில் சேதமடைந்த படகை மீட்டு கரைக்கு கொண்டுவரும் முயற்சியை அதன் உரிமையாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.