மத்தியப் பிரதேசத்தில் பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஏராளமான பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரளத்தில் அதிக அளவில் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாசல், ஹரியாணா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் நீர்நிலைகள், உயிருள்ள பறவை விற்பனை சந்தை, உயிரியல் பூங்காக்கள், கோழிப் பண்ணைகள், இறந்த பறவைகளை அடக்கம் செய்யும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே மத்தியப் பிரதேசத்திலும் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இறந்த பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டன.
நான்கு நாள்களுக்கு பிறகு வந்த சோதனை முடிவில், இறந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இறந்த பறவைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் மக்களுக்கு பறவைக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.