நாட்டின் வளா்ச்சியில் விவசாயம் பெரும் பங்களித்துள்ளதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்தாா்.
வரும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்தப் பண்டிகை நாடு முழுவதும் மகர சங்கராந்தி, போகலி பிஹு, உத்தராயண், பெளஷ் பா்வ் என்ற பெயா்களில் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகைக்கு முந்தைய தினம் லோஹரி என்ற அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் விவசாயிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘நாட்டின் வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு விவசாயம் பெரும் பங்களித்துள்ளது. கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் மரியாதை செலுத்த இந்தப் பண்டிகைகள் தக்க தருணமாகும். இந்தப் பண்டிகைகள் சமூகத்தில் அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்தி, நாட்டில் மகிழ்ச்சியையும், வளத்தையும் அதிகரிக்கட்டும்’ என்று தெரிவித்தாா்.