பறவைக் காய்ச்சல் எதிரொலியாக மற்ற மாநிலங்களின் பறவைகளைக் கொண்டுவருவதற்கு மணிப்பூர் அரசு தடை விதித்துள்ளது.
பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரளத்தில் அதிக அளவில் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாசல், ஹரியாணா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் நீர்நிலைகள், உயிருள்ள பறவை விற்பனை சந்தை, உயிரியல் பூங்காக்கள், கோழிப் பண்ணைகள், இறந்த பறவைகளை அடக்கம் செய்யும் பகுதி உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தில்லி, இமாசல் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து மணிப்பூர் அரசும் வெளி மாநிலங்களிலிருந்து பறவைகளைக் கொண்டுவருவதற்குத் தடை விதித்துள்ளது. மேலும் இறைச்சி இறக்குமதிக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சலிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்றும் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.