மெட்ரோவில் பயணிக்க வரும் 18-ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயமில்லை என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
மேலும் வார நாள்களில் மெட்ரோ ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் மேற்கு வங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக மெட்ரோ உள்ளிட்ட ரயில் சேவைகளுக்கு மேற்கு வங்கத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
கரோனா பரவும் விகிதம் குறைந்து வருவதற்கேற்ப மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அந்தவகையில் மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. கரோனா நெறிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 18-ஆம் தேதி முதல் மெட்ரோவில் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை என்று மேற்கு வங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வார நாள்களில் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், படிப்படியாக அனைத்து வயதினரும் பயணிக்க அனுமதியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.