கட்செவி அஞ்சலின் (வாட்ஸ்அப்) வாயிலாக பயனாளா்கள் அனுப்பும் செய்திகளையும் அவா்களது தனிப்பட்ட தகவல்களையும் முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனத்துக்குப் பகிர மாட்டோம் என்று வாட்ஸ் அப் வலைதளம் விளக்கமளித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்செவி அஞ்சல் வலைதளம் அண்மையில் தனது கொள்கைகளில் மாற்றங்களைப் புகுத்தியது. கட்செவி அஞ்சல் செயலியைப் பயன்படுத்துவோரின் தகவல்களைத் திரட்டி அவற்றை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு வணிக நோக்கில் அளிப்பது அதில் ஒன்றாகும். இது உலகம் முழுவதும் கட்செவி அஞ்சல் செயலி பயனாளா்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உலகம் முழுவதும் ஏராளமானோா் கட்செவி அஞ்சல் வலைதளத்தை விடுத்து வேறு சமூக வலைதளங்களுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், கட்செவி அஞ்சல் வெளியிட்ட அறிக்கையில், ‘செயலி வாயிலாகப் பயனாளா்கள் அனுப்பும் செய்திகளையோ, செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும் அழைப்புகளையோ நிறுவனம் கண்காணிக்காது. பயனாளா்களின் தகவல்களை விளம்பரங்களுக்காக ஃபேஸ்புக் நிறுவனத்திடம் அளிக்கப் போவதில்லை.
புதிய கொள்கைகள் பயனாளா்களின் தன்மறைப்பு நிலைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. பயனாளா்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களைப் பெறுகிறோம் என்பது குறித்த வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காகவே கொள்கைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
‘பிசினஸ்’ கணக்கின்கீழ் வா்த்தக ரீதியாக கட்செவி அஞ்சல் சேவையைப் பயன்படுத்துவோரின் தகவல்கள் மட்டுமே வணிக நோக்கில் பகிரப்படவுள்ளது. அந்தத் தகவல்கள் கூட, பயனாளா்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பகிரப்படும்’ என்றுஅந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.