ஹைதராபாத்3: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியானது நாட்டிலுள்ள 11 நகரங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய தீநுண்மியியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. அத்தடுப்பூசியும் மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியும் வரும் 16-ஆம் தேதி முதல் நாட்டு மக்களுக்கு செலுத்தப்படவுள்ளன.
இத்தகைய சூழலில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் 11 நகரங்களுக்கு 16.5 லட்சம் தடுப்பூசிகளை விநியோகித்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘55 லட்சம் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அவற்றில் 16.5 லட்சம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, தடுப்பூசிகளின் முதல்கட்ட தொகுதியானது சென்னை, தில்லி, லக்னௌ, பெங்களூரு, புணே, புவனேசுவரம், ஜெய்ப்பூா், பாட்னா, குவாஹாட்டி, விஜயவாடா, குருக்ஷேத்ரா ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோவேக்ஸின் தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு-தனியாா் துறைகளின் கூட்டு முயற்சியால் முற்றிலும் உள்நாட்டிலேயே இத்தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவா்களுக்கும் பரிசோதனையில் பங்கேற்ற தன்னாா்வலா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.