மும்பை: தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக, மகாராஷ்டிர மாநில சமூக நீதித் துறை அமைச்சர் தனஞ்செய் முண்டே மீது பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். புகாரளித்த பெண்ணும், அவரது சகோதரியும் தன்னை சதித் திட்டத்துடன் மிரட்டுவதாகக் கூறி அமைச்சர் முண்டே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சமூக நீதித் துறை அமைச்சருமான தனஞ்செய் முண்டே மீது 37 வயதான பெண் ஒருவர், ஜன. 10-ஆம் தேதி மும்பை காவல் துறை ஆணையருக்கு மனு கொடுத்தார். அந்த மனுவில், தன்னை அமைச்சர் முண்டே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகவும், இதுதொடர்பாக ஓஷிவாரா போலீஸில் தான் அளித்த புகாரை ஏற்க மறுத்து விட்டதால் நடவடிக்கை எடுக்குமாறும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரை மறுத்த அமைச்சர் முண்டே, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என்னை அச்சுறுத்துவதற்காகவும், மிரட்டுவதற்காகவும் தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இதுவாகும். புகாரளித்த பெண்ணின் சகோதரியுடன் எனக்கு உறவு இருந்தது உண்மை; அந்தப் பெண் மூலமாக எனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதையும் ஒப்புக்கொள்கிறேன். இந்த விஷயத்தை எனது மனைவி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் அறிவார்கள். அந்த இரண்டு குழந்தைகளையும் எனது குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டு விட்டனர்.
தற்போது புகாரளித்துள்ள பெண், கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்தே என்னை மிரட்டி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.