மகாராஷ்டிரத்தின் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள பர்பானி மற்றும் பீட் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பறவைக்காய்ச்சல் கண்டறிந்துள்ள நிலையில், அங்குள்ள 2000-க்கும் மேற்பட்ட பறவைகளை அழிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பர்பானி மற்றும் லோகாண்டி சாவர்கான் கிராமத்திலிருந்து, பாதிக்கப்பட்ட பறவைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டது என்று சேலு நகர வட்டாட்சியர் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பறவைகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் முக்லிகர் தெரிவித்தார்.
முதற்கட்டமாக 468 பறவைகளின் மாதிரிகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை இரவு வெளியானதைத் தொடர்ந்து அவைகள் அழிக்கப்பட்டன.
மேலும், லோகாண்டி சாவர்கான் கிராமத்தில் சுமார் 1,600 பறவைகள் அழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பறவைகளை அழிப்பதற்கு இரண்டு தனிக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட பறவைகளைப் புதைக்க 2 மீட்டர் அளவில் குழி தயார் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் ஜனவரி 8 முதல் இதுவரை 3,949 பறவைகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
பர்பானி மாவட்டத்தின் முரும்பா கிராமத்தில் மட்டும் 3,400-க்கும் மேற்பட்ட கோழிகள் பறவைக் காய்ச்சலுக்கு இறந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மும்பை, தாணே, பர்பானி, லாதூர், பீட் மற்றும் தபோலி (ரத்னகிரி) ஆகிய மாவட்டங்களில் பறவை காய்ச்சல் நோய் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.