குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த 15 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை நள்ளிரவு கிம்-மாண்ட்வி சாலையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சரக்கு லாரி ஒன்று கரும்புகளை ஏற்றிவந்த டிராக்டருக்கு வழிவிடும்போது சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இந்த விபத்து, சூரத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள கோசாம்பா கிராமத்திற்கு அருகே நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு மாநில முதல்வர் விஜய் ரூபானி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். அதேபோல் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி அறிவித்துள்ளார்.