மேற்குவங்க சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் மட்டும் போட்டியிட வேண்டுமென பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி, பூர்பா மிட்னாபூரில் உள்ள கெஜூரியில் நடந்த பேரணியில் பேசினார்.
அப்போது அவர், 'திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இரண்டு இடங்களில் போட்டியிடுவது நியாயமில்லை. அவர் நந்திகிராம் தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும். அவர் இரண்டு இடங்களில் போட்டியிட முடியாது. நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவரைத் தோற்கடிப்பேன்.
நந்திகிராமில் நில அபகரிப்புதொடர்பாக இடதுசாரி கட்சி ஆட்சியின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்' என்று தெரிவித்தார்.
முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும், முடிந்தால், பவானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரண்டு தொகுதியிலும் போட்டியிடுவேன் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.
நந்திகிராம் தனது மூத்த சகோதரி, பவானிபூர் தனது இளைய சகோதரி போன்றவை என்று கூறிய அவர் பவானிபூரிலிருந்து தான் போட்டியிடாவிட்டால் அங்கு ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்துவேன் என்றும் கூறினார். தற்போது மம்தா பானர்ஜி பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருக்கிறார்.