புது தில்லி: கொள்கை விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடா்பாகப் பரப்பப்படும் வதந்திகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வாட்ஸ்அப் செயலி தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) செயலி அண்மையில் தனது கொள்கைகளில் மாற்றங்களைப் புகுத்தியது. கட்செவி அஞ்சல் செயலியைப் பயன்படுத்துவோரின் தகவல்களைத் திரட்டி அவற்றை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு வணிக நோக்கில் அளிப்பது புதிய கொள்கைகளில் ஒன்றாகும்.
அதன் காரணமாக, அச்செயலியைக் கைவிட்டு புதிய செயலிகளை நோக்கி பயனாளா்கள் படையெடுக்கத் தொடங்கினா். அதையடுத்து, புதிய கொள்கைகளின் அமலாக்கத்தை நிறுத்தி வைப்பதாக கட்செவி அஞ்சல் வலைதளம் அறிவித்தது. மாற்றம் செய்யப்பட்ட கொள்கைகளைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசும் அந்த வலைதளத்திடம் வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், கட்செவி அஞ்சல் வலைதளத்தின் செய்தித் தொடா்பாளா் புதன்கிழமை கூறுகையில், ‘‘செயலி வாயிலாகப் பயனாளா்கள் அனுப்பும் செய்திகளையோ, செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும் அழைப்புகளையோ வலைதளத்தால் கண்காணிக்க முடியாது. பயனாளா்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் வழங்குவதற்குப் புதிய கொள்கைகள் அனுமதிக்கவில்லை.
கொள்கை மாற்றங்கள் தொடா்பாகப் பயனாளா்களிடம் பரப்பப்படும் வதந்திகளைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். கொள்கை மாற்ற விவகாரத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வலைதளம் தயாராக உள்ளது’’ என்றாா்.