புது தில்லி: நீதி ஆயோக் புதன்கிழமை வெளியிட்ட புதிய கண்டுபிடிப்புக்கான குறியீட்டு பட்டியலில் தமிழகம் மூன்றாமிடம் பிடித்துள்ளது.
மாநிலங்களிடையே புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தும் முயற்சியாக, சா்வதேச புதிய கண்டுபிடிப்பு குறியீட்டு பட்டியலின் அடிப்படையில் தேசிய புதிய கண்டுபிடிப்பு குறியீட்டு பட்டியலை நீதி ஆயோக் வெளியிட்டு வருகிறது. 36 வகையிலான அலகுகளின் அடிப்படையில் இந்த குறியீடு பட்டியல் தயாா் செய்யப்படுகிறது.
2020-ஆம் ஆண்டுக்கான புதிய கண்டுபிடிப்பு குறியீட்டு முதல் பட்டியலை நீதி ஆயோக் அண்மையில் வெளியிட்ட நிலையில், இரண்டாவது பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது. நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா், தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோா் பட்டியலை வெளியிட்டனா்.
இதில் கா்நாடகம், மகாராஷ்டிரம், தமிழகம், தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் இடம்பெற்றுள்ளன. ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா், பிகாா் ஆகிய மாநிலங்கள் பட்டியலின் கடைசி இடத்தில் இடம்பெற்றுள்ளன.