கர்நாடக மாநிலம் சிவ்மோகா பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் நேற்று இரவு ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக உடனடி விசாரணை நடத்துவதற்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹுனசோடு பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் பாறைகள் உடைக்கும் இடத்தில் நேற்று இரவு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் குவாரியில் பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிவ்மோகா வெடிவிபத்து தொடர்பாக தொடர்பாக உடனடி விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். கல் குவாரி விபத்தில் சிக்கி 10 முதல் 15 பேர் இறந்ததாக பரவும் செய்திகள் உண்மையல்ல. காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் வெடிவிபத்துக்கு காரணமான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.