2016-ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனையின் பாதுகாவலரை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சோம்நாத் பாரதியை குற்றவாளி என்று தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் சோம்நாத் பாரதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 4 பேரை நிரபராதிகள் என்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
சோம்நாத் பாரதி மீது சாற்றப்பட்ட குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை தலைமை பாதுகாவலர் ஆர்.எஸ். ராவத் தில்லி காவல்நிலையத்தில் அளித்த புகாரில், சோம்நாத் பாரதி மற்றும் அவரது 300 ஆதரவாளர்கள், எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.