ஆக்ரா: ஆட்டை அடித்துத் துன்புறுத்தியதைத் தட்டிக் கேட்ட தந்தை - மகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஆக்ராவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பசௌனி காவல்நிலைய அதிகாரிகள் கூறுகையில், இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் வெள்ளிக்கிழமை நிகழ்ந்ததாகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளி தலைமறைவாகிவிட்டதகாவும் தெரிவித்துள்ளனர்.
பீகாராம் சிங் என்பவரது ஆடு ஒன்று கியானி என்பவரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. இதில் கியானியின் வீட்டுக்குள் நுழைந்த ஆட்டை கட்டையால் அடித்தும், காலை உடைத்தும் யாரோ துன்புறுத்தியுள்ளனர். இதனால் ஆட்டின் உரிமையாளர் பீகம் சிங்குக்கு கடும் கோபம் ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், கியானி, தனது கைத்துப்பாக்கியால் பீகம் சிங் மற்றும் அவரது 20 வயது மகன் ஜிதேந்திராவை சுட்டுக் கொன்றுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் கிராமத்துக்குள் வருவதற்குள் குற்றவாளி தப்பியோடியுள்ளார்.
இதனால் கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது. காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சிறிய தகராறு எவ்வாறு இப்படியொரு இரட்டைக் கொலைக்குக் காரணமானது என்று தெரியாமல் கிராம மக்களே அதிர்ந்து போயுள்ளனர்.