நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது திருவுருவ சிலைக்கும், படத்திற்கும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேதாஜியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் பேசிய அமித் ஷா, நேதாஜியைப் பற்றி குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கற்பிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்துள்ள நேதாஜியின் 125-வது பிறந்தநாள் விழாவில் நாம் அனைவரும் கலந்துகொள்வோம். லட்சக்கணக்கான குழந்தைகள் நேதாஜியின் வாழ்க்கையை பாடமாக எடுத்துக்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பார்கள் என்று கூறினார்.
நேதாஜியின் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா பகுதியிலுள்ள விக்டோரியா நினைவிடத்தில் இன்று நேதாஜியின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.