நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளையொட்டி பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி உரையின்போது பாஜக தொண்டர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது.
பொது நிகழ்ச்சியின்போது பேச அழைத்துவிட்டு அவமதிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தலைமை தாங்கினார்.
நேதாஜி பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மம்தா பானர்ஜியும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி உரையின்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று பாஜக தொண்டர்கள் முழக்கமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி பேச மறுப்பு தெரிவித்தார்.
அரசு நிகழ்ச்சிகள் கண்ணியத்துடன் நடைபெற வேண்டும். இது அரசியல் சார்ந்த நிகழ்ச்சி அல்ல. ஒருவரை பேச அழைத்து அவமதிப்பது பொருந்தாத செயல். போராட்டம் போன்று இருப்பதால் பேசுவதற்கு எதுவுமில்லை என்று அவர் விலகினார்.
ஏற்கெனவே பாஜக - திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அடிக்கடி மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், மம்தா உரையின்போது பாஜக தொண்டர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கங்களை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.