பிகாரில் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான கருத்துகளை பதிவிட்டால், அவை இணையவழி (சைபா்) குற்றமாக கருதப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநில காவல்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிகாரில் அரசுக்கு எதிராகவோ, அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகளுக்கு எதிராகவோ சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான பதிவுகளை வெளியிட்டால் அவை இணையவழி குற்றமாக கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிக்கை அனைத்து மாநில முதன்மைச் செயலா்கள், பல்வேறு துறை செயலா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதை மீறி தனிநபா்கள் அல்லது அமைப்புகள் சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமாக பதிவிட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநில எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவ், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஹிட்லரின் அடியொற்றி நடப்பதாக சுட்டுரையில் சாடினாா்.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி, இணையவழி குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து தண்டனை விதிக்கப்படும்.