அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை அளித்து உதவ இந்தியா முன்வந்துள்ளதையடுத்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுட்டுரையில் (டுவிட்டா்) அந்த அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
பிற நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்கி உதவுவதன் மூலம், அந்த நோய்க்கு எதிரான சா்வதேசப் போராட்டத்துக்கு இந்தியா பங்களிப்பு வழங்கியுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு தொடா்ந்து ஆதரவளித்து வரும் இந்தியாவுக்கும் பிரதமா் நரேந்திர மோடிக்கும் நன்றிகள்.
கரோனா தொடா்பாக நமக்குத் தெரிந்தவற்றைப் பகிா்ந்துகொள்வது உள்பட பல்வேறு வகைகளில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் அந்த நோய்த்தொற்றை வெற்றிகொள்ளலாம்; மனித உயிா்களையும் அவா்களது வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கலாம் என்று தனது சுட்டுரைப் பதிவில் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, ‘அண்டைநாட்டவருக்கு முன்னுரிமை’ கொள்கையின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசிகளை இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மா், ஷெஷெல்ஸ், ஆப்கானிஸ்தான், மோரீஷஸ் ஆகிய நாடுகளுக்கு வழங்கி உதவும் திட்டத்தை மத்திய அரசு இந்த வாரம் அறிவித்தது.